தெற்கு ஆசியாவிலே முதன் முதலாவதாக மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே. இச்சிறப்பைத் தமிழ் மொழிக்கு அளித்தவர் சீகன்பால்கு என்னும் ஜெர்மன் நாட்டவர்.
இவரது தாயார் கர்தினா தான் சாகும் முன் தனது பிள்ளைகளை அழைத்து, 'இவ்வுலகில் உங்களைத் தனியாக விட்டுச் செல்லும் நான் உங்களுக்கு மிகப்பெரிய செல்வம் ஒன்றை தருகிறேன்; அதை என் வேதபுத்தகத்திலே கண்டடைவீர்கள். அதன் ஒவ்வொரு பக்கத்தையும் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன்' என்றார். அப்போது சீகன்பால்குக்கு வயது ஆறு. இரு ஆண்டுகளுக்குப் பின் தந்தையும் மரணமடைந்தார்.
டென்மார்க்கு அரசர் நான்காம் பிரெடரிக் சீகன்பால்கையும் அவரது நண்பர் புளுட்சோவையும் நற்செய்திப்பணி செய்ய தரங்கை அனுப்பினார். இவ்விருவரும் 1706-ம் ஆண்டு ஜுலை 9-ம் தேதி டேனிஷ் வந்தனர். வந்தது முதல் மரணம் மட்டும் பலவித பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார். 'கடவுளைப் பற்றி எல்லா சித்தார்த்தங்களையும் அறிந்திருக்கிறேன் என்பது மட்டும் போதாது, கடவுளுக்கும் எனக்கும் சரியான தொடர்பு உள்ளது' என்பதையே மதிக்கிறேன் என்ற கொள்கையுடைய கிறிஸ்தவ பக்தி இயக்கத்தைச் சார்ந்தவர் சீகன்பால்கு.
1708 அக்டோபர் 17-ம் தேதி ஊக்கமா இறை வேண்டுதலுடன் புதிய ஏற்பாட்டை மொழி மாற்றம் செய்யத் துவங்கினார். 1711 மார்ச் மாதம் 31-ம் தேதி புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்தார். நியாயமற்ற குற்றச்சாட்டுகளின் பொருட்டு 128 நாட்கள் சிறையிலிருந்தார். இறைமக்களின் உதவியால் தரங்கையில் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது. தரங்கை அருகே உள்ள கடுதாசிபட்டறை என்னும் ஊரில் காகிதம் தயாரிக்கப்பட்டது. சிறுவருக்கான பள்ளிகள், விடுதிகள் போன்றவற்றை நிறுவினார். தமிழ் மக்களுக்காக புதி எருசலேம் என்னும் பெரிய ஆலயத்தைக் கட்டினார். 1719-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியில் தனது 37-ம் வயதில் தரங்கையில் ஆண்டவருக்குள் மரணமடைந்தார். இவர் நிறைவு செய்யாமல் விட்டிருந்த பழைய ஏற்பாட்டின் மொழி மாற்றத்தை பெஞ்சமின் சூல்சே செய்தார். 1728-ல் முழு வேதாகமம் வெளியிடப்பட்டது.
சீகன்பால்கு வேதாகமத்தை பாமர மக்களின் தேவைக்காக அன்னாரின் பேச்சுத் தமிழிலே மொழி மாற்றம் செய்தார். இதைக் கொண்டு சீகன்பால்குக்கு செந்தமிழ் அறிவே கிடையாது என்றவரும் இருந்தனர். ஏறத்தாழ 40 ஆண்டுகளாக இவரது மொழிபெயர்ப்பே தமிழருக்கு வேதமாக இருந்தது.
இந்திய அரசு வெளியிட்ட சீகன்பால்கு உருவம் கொண்ட தபால் தலை
Comments
Post a Comment